மனிதர்வாழ்வி லேதிறம் கொண்டுஉய்யவே பரம்
மனிதஉருவி லேபுலம் வளையவந்த தேநிதம்
இனித்தகீதை யில்அதும் எடுத்துச் சொன்ன தேசதம்
பனிக்கசசெய்வ தாய்நிதம் நினைக்கத்தோன்று மேபதம்
விளங்கும் தமிழில் பூச்சரம்
தொடுக்கும் எண்ண மாய்ச்சுரம்
பற்றி என்னை ஆட்டுது
தொற்றுநோய்போல் வாட்டுது
இருக்கும் அழுக்கு ஆயிரம்
இதற்குள் என்ன பாயிரம்
என்னும் எண்ண மேவரும்
பொழுது மனமும் சாய்ந்துறும்
பொறுத்து நானும் தெளிந்திட
படித்து நன்றாய்ப் புரிந்திட
பிறவி யாகும் ஆயிரம்
பிறகும் பழுது இருந்துறும்
அலைகள் என்று ஓய்வது
குளித்தல் என்று செய்வது
கலைகள் கற்று அறிவது
நிலையில் எனக்கு அரியது
*கள்ளன் வேண்டி யேவரம்
உள்ளம் சொன்ன தோமரம்
அருளிச் செய்த துன்திறம்
பொருளில் ராம மந்திரம்
*கள்ளன் : வால்மீகி
நினைத்து பார்த்து தெளிந்திட்டேன்
கணத்தில் முடிவு எடுத்திட்டேன்
உன்னை எண்ணி துணிந்திட்டேன்
உன்மேல் பாரம் இறக்கிட்டேன்
துலங்கத் தோன்றி உன்கரம்
அளிக்க வேண்டு மேவரம்
விளக்கத் தமிழில் என்திறம்
விளங்க வேண்டு மேநிதம்
தொழுது உன்னை வேண்டினேன்
பழுதுநீக்கிப் பொறுத்திடு
விழுது போன்ற கீதையில்
எழுந்த நல்ல பாதையில்
வாழ்ந்த நல்ல காதையாய்
வாழ்வை மெல்ல மாற்றிடு...!
கண்ணன் காட்டும் பாதை நல்ல அந்த கீதை
அரியதாம் கண்ணன் அன்று
பெரியபா ரதம்பி றந்து
சிறியதோர் ரதத்தில் நின்று
அறியவோர் அறம் நவின்று
இருப்பதாம் கீதை நன்று
பயில்வதால் அதைநீ சென்று
விளங்குமாம் சோதி ஒன்று
விலகுமாம் இருள கன்று..!
போரதனின் காரணங்கள்
பாரதத்தில் போரிடும் பாண்டவர்கள் கோரிடும்
நூலிடமும் இல்லையே என்றான்திருதன் பிள்ளையே
பாரதனில் போரிட சேதம்நேரும் உயிர்விட
பாரதனை நிறுத்திட என்றான்தருமன் கண்ணனை
கண்ணன்தூது சென்றனன் படியில்ஏறி நின்றனன்
மன்னன் திருதராட்டிரன் பாசம்மறைக்கும் நேத்திரன்
அவனின்பிள்ளை துரியனோ அறிவுதிரிந்த ஆத்திரன்
முரடன்ஒருவன் இருந்திட அறிவுஎங்கு எடுபடும் ?
இருவரங்கு இருந்தனர் அமைதிதடுத்து நின்றனர்
இருக்கும்காது இரண்டையுமே இறுகமூடிக் கொண்டனர்
ஒருவன்பிறவிக் குருடனாம் ஒருவன்அறிவின் குருடனாம்
முடிந்தவரையில் முயன்றனர் ஆன்றோர்எடுத்து இயம்பினர்
செவிடன்காதில் சங்கென ஒலிக்கமனமும் வெதும்பினர்
பிடித்தமுயலின் காலென அடித்து துரியன் பேசினன்
போர்தொடுக்கும் வெறியிலே ஒற்றைக்காலில் நின்றனன்
கண்ணன்திரும்பி வந்தனன் சங்கினொலி செய்தனன்..!
No comments:
Post a Comment